புதுச்சேரி: வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து புதுச்சேரியில் உள்ள மீன் விற்பனை அங்காடிகளில் மீன்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள குபேர் மீன் அங்காடி உள்ளிட்ட அங்காடிகளில் உள்ளூர் மீனவர்கள் பிடித்த மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். சமீக காலமாக தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு மீன்களை கொண்டு வந்து இதற்கான முகவர்கள் மூலம் விற்பனை செய்கின்றார்கள்.
இந்நிலையில் வெளி மாநிலத்தில் இருந்து வரும் மீன்களை விற்பனை செய்யப்படுவதால் உள்ளூர் மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று பிடித்து வரப்படும் மீன்கள் விற்பனையாவது இல்லை எனக் கூறியும், உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறியும் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக விசைப்படகு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. தொடர்ந்து வெளிமாநிலத்தில் இருந்து மீன்கள் கொண்டுவந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென நகரப்பகுதியான சோனாம்பாளையம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது அவர்கள் வெளிமாநில மீன்கள் புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை செய்யக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மீனவர்கள் அதற்கு செவிசாய்க்காமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உடனடியாக வெளிமாநில மீன்கள் புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என உறுதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் இன்று புதிதாக 1,216 பேருக்கு உறுதியான தொற்று…