சென்னையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை தாக்கியதாக வழக்கறிஞர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழவதும் பல இடங்களில் இரவு நேரங்களில் குற்றங்களைத் தடுப்பதற்காக போலீஸார் ஆங்காங்கே வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சென்னையில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகர் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இச்சோதனையின்போது, அவ்வழியாக பெண்ணுடன் வந்த நபரை போலீஸார் தடுத்து நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். உடனே அந்த நபர் வாகனத்தில் அமர்ந்தவாறே தான் ஒரு வழக்கறிஞர், ஹெல்மெட் உட்பட அனைத்து வாகன ஆவணங்களும் சரியாக உள்ளது என கூறியுள்ளார். இதன் பேரில் போலீஸார் அவர்களை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இதையடுத்து அந்த நபர் அந்த இடம் விட்டுச்செல்லாமல் வாகனத்தில் பின்னால் பெண் அமர்ந்து செல்லும் போது என்னை எப்படி நிறுத்தலாம் என்று கேட்டதுடன், தான் ஒரு வழக்கறிஞர் எனக்கூறி உதவி ஆய்வாளர் பிரபாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென அந்த வாலிபர், உதவி ஆய்வாளரை முகத்தில் குத்தியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து காயமடைந்த உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் போலீஸார் அந்த வாலிபரைப் பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் வியாசர்பாடி எம்.கே.பி நகரைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் மகன் பிரசன்னா வெங்கடேஷ்(27) என்பதும், வழக்கறிஞர் என்பதும், மற்றொரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளரை தாக்கியதாக பிரசன்னா வெங்கடேஷை கைது செய்த கோட்டை போலீஸார் அவர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலைநிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது டபிள்யுபில்..