நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் எம்.ஜெயமாருதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சி.மூர்த்தி. இவர் ஆசிய வலுதூக்கும் வீரர். இவரின் மகன் எம்.ஜெயமாருதி. 17 வயதாகும் ஜெயமாருதி இளங்கலை கணினி அறிவியலில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
ஜெயமாருதி தனது 12 வயதிலிருந்தே வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். வலுதூக்கும் போட்டிகளில் பலரது கவனத்தையும், பல சாதனைகளையும் இவர் புரிந்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில், ஜெயமாருதி நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு, அங்கு போட்டிகளில் பங்கேற்றார். இப்போட்டிகள், கடந்த நவம்பர் மாதம் 27-முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 74 கிலோ எடைப் பிரிவில் ஸ்குவாட் 253 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், புதிய உலக சாதனையையும் நிகழ்த்தினார்.
மேலும், பெஞ்ச் பிரஸ் பிரிவில் 137.5 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், டெட்லிப்ட் பிரிவில் 245 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், ஒட்டுமொத்தமாக 635.5 கிலோ தூக்கி மொத்தம் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக, ஜெயமாருதி கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலம், காசர்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் 74 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்று, 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகக் கோப்பை போட்டி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்…