இரண்டாம் எலிசபெத் கடந்த 1952-ம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக பதவியேற்றார். அன்றிலிருந்து கிட்டத்தட்ட 70 வருடங்களாக இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி இரவு காலமானார். இதைத் தொடர்ந்து, பட்டத்து இளவரசரான சார்லஸ் பிரிட்டனின் அடுத்த அரசரானார்.
இந்நிலையில், சார்லஸ் உரையாற்றியபோது பேசியதாவது:
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் , மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர். அவரின் இந்த மறைவு துக்கத்தை அளிக்கிறது. ராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன்.
அன்பு, விசுவாசம், மரியாதையோடு என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன். நான் விரும்பி செய்யும் சமூக சேவை பணிகளில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது. மேலும், பிரிட்டன் இளவரசராக வில்லியம் செயல்படுவார்.
இவ்வாறு சார்லஸ் உரையாற்றினார்.
மேலும், பக்கிங்ஹாம் அரண்மனை வரலாற்றை பொறுத்தவரை, கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை பெரும்பாலும் அரசிகளே அணிந்துள்ளனர். அந்த வகையில் மன்னரின் இரண்டாம் மனைவி கமிலா பார்க்கர் பவுல்ஸ்க்கே இந்த கிரீடம் அடுத்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, சார்லஸுக்கும் மறைந்த இளவரசி டயானாவுக்கும் பிறந்த வில்லியம்ஸ் அடுத்தபடியாக மன்னராகும் தகுதியை பெறுகிறார். இவரது மூன்று மகன்கள் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசுகளாகி உள்ளனர்.
மேலும், இரண்டாவது மகன் ஹாரி, அரச குடும்பத்தைச் சேராத மேகன் மார்கெல் என்பவரை மணந்ததால், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்தே வில்லியம் பிரிட்டன் இளவரசராக பொறுப்பேற்க உள்ளார்.