ஜியோ பயனர்களுக்கு இன்று காலை அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற சேவைகள் முடங்கியதால், பயனர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்தியாவின் முன்னணி தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று ஜியோ. இணையதள வசதியில் ஒரு பெரிய புரட்சியை ஜியோ நிறுவனம் செய்ததாகவே கூறலாம்.
நாடு முழுவதும் ஏராளமான பயனர்கள் ஜியோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின் சில நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை பல்வேறு பகுதிகளில் ஜியோ சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற சேவைகள் முடங்கியதால் பயனர்கள் சிரமத்திற்குள்ளாகினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு சேவைகள் செயல்பட தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது வரை ஜியோ நிறுவனம் இதுகுறித்து எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.