உக்ரைன் மீது இரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், நாளுக்கு நாள் இரஷ்யாவின் இராணுவத்தால் உக்ரைனில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகள் பலவும் இரஷ்யாவின் இராணுவத்தால் சீரழிக்கப்பட்டு வருகின்றன. உக்ரைன் இராணுவமும் இரஷ்யாவின் இராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது நினைத்தால் கூட இரஷ்யாவால் போரை நிறுத்த இயலும் ஆனால் உக்ரைன் எங்களிடம் சரணடைந்தால் மட்டுமே நாங்கள் போரை நிறுத்துவோம் என இரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருந்தார். உக்ரைனும் நாங்கள் சரணடைய மாட்டோம் என்று தெரிவித்து வருகிறது.
இப்படியான சூழலில் உலக நாடுகள் பலவும் இரஷ்யாவை போரை நிறுத்தச் சொல்லி வருகிறது. ஆனாலும் இரஷ்யா எவரின் பேச்சையும் கேட்பதாய் இல்லை. இதனால் இரஷ்யாவின் மீது உலக நாடுகளில் பலரும் அதிருப்தியில் உள்ளன. பல நாடுகளில் இரஷ்யாவுக்கு எதிரான முழக்கங்கள் மக்களால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்தான், அயர்லாந்தில் ஒரு சம்பவம் நிகழ அது பலரின் கவனத்தையும் பெற்று வருகிறது. ஆம்! அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் உள்ள இரஷ்ய தூதரகத்தினை லாரியால் மோதியதுதான் அந்த நிகழ்வு. இரஷ்ய தூதரகத்தின் சுற்றுச்சுவர்களை உடைத்து அந்த லாரியானது சென்றுள்ளது. மேலும் அந்த லாரியை ஓட்டி வந்தவர் இரஷ்ய தூதுவர்களை அயர்லாந்தை விட்டு வெளியேறுமாறும் குரல் கொடுத்துள்ளார். இதனை அறிந்த காவல்துறை அதிகாரிகள் அந்நபரை கைது செய்துள்ளனர். இப்படியான நிகழ்வுகளால் உலக மக்கள் எந்த அளவிற்கு இரஷ்யாவின் மீது அதிருப்தியில் உள்ளனர் என்பதை நம்மால் அறிய முடிகிறது.