பெருந்தொற்று காரணமாக ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் சர்வ தேச விமானச் சேவையை நிறுத்தி வைத்து இருந்த நிலையில் தற்போது வருகின்ற 27 ஆம் தேதி விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது.
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக சர்வ தேச விமானச் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு போடப்பட்டு அத்தியாவசிய கடைகளும் அப்போது மூடப்பட்டன. பொது போக்குவரத்துக்கும் தடை நீடிக்கப்பட்டிருந்தது.
அத்தியாவசிய தேவைகளுக்கான சர்வதேச விமானங்களைத் தவிர்த்து அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டனர்.
தொற்று குறைவின் காரணமாக 2021 ஆம் ஆண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இருந்தும் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையின் காரணமாக சர்வ தேச விமானச் சேவையின் முடக்கம் நீடித்திருந்தது.
கடந்த டிசம்பர் மாதத்தில் விமான சேவைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வருகின்ற 27 ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், சுகாதாரமான பயணத்திற்கு பெருந்தொற்றின் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்தியாவின் சர்வதேச பயணிகள் விமானச் சேவை போக்குவரத்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.