உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்பி (HP) 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ட்விட்டரை கைப்பற்றியவுடன், ட்விட்டர் 2.0 திட்டத்தை முன்வைத்து, ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் 4000-த்திற்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சியளித்தார்.
இதைத்தொடர்ந்து, மெட்டா நிறுவனம் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான முடிவுகளை எடுத்தது. அதன்படி, மெட்டாவின் வருவாய் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைந்துள்ளதால், மெட்டாவின் பணியாளர்கள் எண்ணிக்கையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000- க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும், அமேசான் நிறுவனமும், கூகுளும் ஊழியர்கள் பணிநீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இரு நிறுவனங்களும் தலா 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ட்விட்டர், மெட்டா, அமேசான், கூகுள் வரிசையில் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தயாரித்து வரும், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்பி-யும் இணைந்துள்ளது. எச்பி வெளியிட்டுள்ள நடப்பு முழு ஆண்டுக்கான நிதி அறிக்கையில், 4 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் பேரை 2025 நிதியாண்டுக்குள்ளாக பணிநீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
தற்போது, எச்பி நிறுவனத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்ற நிலையில், இந்த அறிவிப்பு அவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இருபது ஓவர் அணி குறித்து ஹர்பஜன் சிங் சொல்வது என்ன?