டிராவிடும் நெஹ்ராவும் இணைந்து 2024 இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியை உருவாக்கலாம் என்றும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடப்பாண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இத்தொடரில், இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற ஆசியக் கோப்பை, தற்போது இருபது ஓவர் உலகக் கோப்பை என இரு முக்கிய தொடர்களில் இந்திய அணி பெரியதாக சோபிக்காமல் போனது ரசிகர்களையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் (பிசிசிஐ) ஏமாற்றமடைய செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தற்போது தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினர் நீக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய இருபது ஓவர் அணி குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, ‘இருபது ஓவர் கிரிக்கெட்டில் நெஹ்ரா போன்ற ஒருவர் பயிற்சியாளராக இருக்கவேண்டும். அவர் சமீபத்தில்தான்
ஓய்வு பெற்றார். ராகுல் மீது எனக்கு மரியாதை உண்டு. இருபது ஓவர் கிரிக்கெட் பற்றி ராகுல் டிராவிடை விடவும் நெஹ்ராவுக்கு அதிகம் தெரியும்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இருபது ஓவர் கிரிக்கெட்டில் சமீபத்தில் விளையாடிய ஒருவர் பயிற்சியாளர் பதவிக்குப் பொருத்தமாக இருப்பார். அதற்காக டிராவிடை நீக்க வேண்டும் என நான் கூறவில்லை. டிராவிடும் நெஹ்ராவும் இணைந்து 2024 இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியை உருவாக்கலாம் என்றும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
நெஹ்ரா கடந்த ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
என்னது எலி கஞ்சா சாப்பிட்டுச்சா? அப்ப 581 கிலோவும் அபேலா? நீதிபதிகளுக்கு ஷாக் கொடுத்த காவல்துறை