தென்காசி சட்டமன்ற உறுப்பினரின் ட்ராக்டர் மோதியதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், கீழ் சுரண்டை அருகே உள்ள குளங்களில் சரல் மணலை அள்ளி எடுத்துச் சென்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினரின் ட்ராக்டர் மோதியதில் 4 வயதான ராஜமுகன் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ட்ராக்ட்டரை இயக்கிய ஓட்டுநர் பாக்யசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, உயிரிழந்த சிறுவனின் தந்தை ராஜதுரை மற்றும் அவரது உறவினர்கள் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் தனது முகநூல் பக்கத்தில், “சுரண்டை நகராட்சி, கீழச்சுரண்டையில் எனக்கு சொந்தமான டிராக்டர் மோதி சிறுவன் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். அந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
நிறுத்தப்பட்ட இலவச பேருந்துகளை இயக்க வேண்டும்: கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு!