தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் தனியார் பள்ளியின் தாளாளர் வினோத். இவருக்கு வயது 34. இவர் அப்பள்ளியில் 12 வகுப்பு பள்ளி மாணவிகளை கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுப்பதாக பள்ளி மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பாக மாணவி ஒருவர் பெற்றோருடன் சென்று பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து தாளாளர் மீது தொடர் புகார்கள் எழவே, மாணவிகளும் அவர்களது பெற்றோரும் பள்ளியில் உள் இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு திருநின்றவூர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, தலைமறைவான பள்ளி தாளாளர் வினோத்தை தேட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், வினோத் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அது மாணவிகளுக்கு தெரியும் என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் இருக்க திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
டெல்லியில் தீ விபத்து…9 மணி நேரமாக போராடும் தீயணைப்புத்துறையினர்