Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்முதுமையே இல்லாமல் வாழ முடியுமா? - என்ன சொல்கிறார் ஆய்வாளார் சின்க்ளேர்...

    முதுமையே இல்லாமல் வாழ முடியுமா? – என்ன சொல்கிறார் ஆய்வாளார் சின்க்ளேர்…

    எல்லோருக்கும் எப்போதும் இளமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றும். முதுமை என்பது இயற்கையானது, தவிர்க்க முடியாதது. நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையை இப்படித்தான் அணுகுகிறோம். ஆனால், மரபியல் நிபுணர் டேவிட் சின்க்ளேர் அப்படி அணுகவில்லை.

    இருபது ஆண்டுகளுக்கும் மேலான தனது ஆய்வுகளின் அடிப்படையில், சில எளிய பழக்க வழக்கங்களால் வயதாவதைத் தாமதப்படுத்தலாம் என்றும் இதன் மூலம் நாம் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் என்றும் அவர் கூறுகிறார்.

    அதோடு, சின்க்ளேர், மருந்துகள் மூலம் இதை விரைவாக சரி செய்ய முடியும் என்று நம்புகிறார். இது இன்னும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மேலும், நாம் உண்மையில் வயதாவதை நிறுத்துவது மட்டுமின்றி மீண்டும் இளமைக்குத் திரும்ப முடியும் என்று அவர் கூறுகிறார்.

    ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் முதுநிலை பட்டமும் பெற்றவரான சின்க்ளேர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வகப் பொறுப்பாளராக இருக்கிறார். அங்கு, நாம் ஏன் முதிர்ச்சியடைகிறோம் என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறார்.

    அவரது பணி, அவருக்கு டஜன் கணக்கான அறிவியல் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இது அவரை பிரபலமாக்கியது. மேலும் 35 காப்புரிமைகளை வைத்திருக்கிறார். பல உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவியுள்ளார். மேலும் பலவற்றில் பங்களிப்பு செலுத்துகிறார். அவற்றில் சில முதுமையடைவதைக் குறைக்கவோ அல்லது தடுக்கவோ ஆய்வு மேற்கொள்வதையே பணியாக கொண்டுள்ளன.

    ஆயுட்காலம் என்ற அதிக அளவில் விற்பனையாகும் நூலின் ஆசிரியரும் சின்க்ளேர் தான். பிபிசி பிரேசிலுடன் சின்க்ளேர் உரையாடியபோது, பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, முதிர்ச்சியடைவது ஒன்றும் தவிர்க்க முடியாதது இல்லை என்றார்.

    மேலும், “முதுமை குறித்த நம் கண்ணோட்டத்தில் தீவிரமான மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மனிதகுலம் அதன் ஆயுட்காலத்தைக் கணிசமாக அதிகரிக்க முடியும்,” என்கிறார்.

    இனி அவருடனான நேர்காணல் உங்கள் பார்வைக்கு:

    வயதாவதன் காரணம்:

    விஞ்ஞானிகள் முதுமையடைவதற்கு ஒன்பது முக்கியமான காரணங்களை அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் என்னுடைய ஆராய்ச்சியில், இந்த காரணங்களில் ஒன்றுதான் முக்கியக் காரணமாக உள்ளது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளோம்.

    1. நம் பெற்றோரிடம் இருந்து நாம் பெற்ற மரபணுத் தகவல்கள் நம் உடலில் உள்ளன.

    2. ஒன்று மரபணு குறியீடாக இருக்கும் “டிஜிட்டல்” தகவல், மற்றொன்று அனலாக் எபிஜெனோம் எனப்படும் எந்த மரபணுக்கள் இயக்கப்படுகின்றன மற்றும் அணைக்கப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள்.

    ஓர் உயிரணுவின் 20,000 மரபணுக்களை ஆன் மற்றும் ஆஃப் செய்வதுதான் அந்த உயிரணுவுக்கு அது யார் என்பதையும் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் கூறுகிறது.

    ஆனால், காலப்போக்கில், சிடி-களில் விழும் கீறல்களைப் போலவே எபிஜெனோம் தகவலை இழக்கத் தொடங்குகிறது. மேலும், உயிரணுக்கள் சரியான நேரத்தில் சரியான மரபணுக்களை இயக்கும் திறனை இழக்கின்றன. அவை தம் செயல்பாட்டை இழக்கின்றன. அதுவே நமக்கு வயதாகிவிடக் காரணம் என்று சின்க்ளேர் நினைக்கிறார்

    நமக்கு வயதாக வேண்டிய அவசியமில்லை என்கிறீர்களே. ஏன்?

    நமக்கு வயதாக வேண்டுமென்று உயிரியலில் எந்தச் சட்டமும் இல்லை. இதை எப்படி நிறுத்துவது என்று நமக்குத் தெரியவில்லை..எபிஜெனோம் மாறக்கூடியது என்பது என் கருத்து. சில விஷயங்களைச் சரியாகச் செய்வது, முதிர்ச்சிக்கான கடிகாரத்தின் வேகத்தைக் குறைக்கும். அதற்கான ரத்த மற்றும் உமிழ்நீர் பரிசோதனைகள் உள்ளன.

    வயதாவது மரபணுவைப் பொறுத்து அல்ல, வாழ்க்கை முறையைப் பொறுத்ததே…

    உங்கள் எதிர்கால ஆரோக்கியத்தில் 80 சதவீதம், உங்கள் மரபணுவைப் பொறுத்து இல்லை, உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உள்ளது.

    நீண்டகாலம் வாழ்பவர்களை கண்காணித்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்த விஷயங்கள் உள்ளன. சரியான உணவு வகைகளை உண்பது, குறைவான கலோரிகளை உண்பது, அடிக்கடி சாப்பிடுவதைக் குறைப்பது ஆகியவை இதில் அடங்கும். உடற் பயிற்சியும் இதில் உதவுகிறது.

    மேலும், ஐஸ், குளிர்ந்த நீர் ஆகியவற்றால் உடல் வெப்பநிலையை மாற்றுவது பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.

    பின்வருவன முதிர்ச்சியடையும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றன;

    இந்த வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் மற்றும் தலையீடுகள் வேலை செய்வதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். சூடாகவோ அல்லது குளிராகவோ இருப்பது, பசியாக இருப்பது மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இந்த பாதுகாப்புகளை செயல்படுத்துவதற்கான வழிகள். இந்த பாதுகாப்புகளின் மூலத்தில் ஒரு சில மரபணுக்கள் உள்ளன.

    அவை எபிஜெனோமை கட்டுப்படுத்துகின்றன. உடற்பயிற்சியால், பசியால் செயல்படுத்தப்படுகின்றன. இதனால்தான் சரியான உணவுகளை உண்ணுதல் மற்றும் உண்ணாமல் இருத்தல் முதிர்ச்சிக்கான கடிகாரத்தின் வேகத்தைக் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது குணப்படுத்தக்கூடியது. அதன் வேகத்தைக் குறைக்கவும் நிகழாமல் தடுக்கவும் முடியும் என்பதை நாங்கள் நிரூபித்து வருகிறோம்.

    பெரும்பாலான நோய்களுக்கு முதுமையே காரணம். இதய நோய், அல்சைமர், நீரிழிவு போன்ற நோய்களுக்கு முதுமையே காரணமாக உள்ளது. எனவே, இது உங்களை வலிமையாக்குகிறது மற்றும் நீண்ட காலம் வாழ வைக்கிறது என்பது தான் எங்கள் கருத்து.

    முதுமைக்கு வேறுபட்ட அணுகுமுறையை நீங்கள் முன்மொழிகிறீர்கள். முதுமையடையும் செயல்முறையை ஒரு நோயைப் போல் நடத்துவது ஏன்?

    முதுமை என்பது ஒரு நோய். அது பொதுவானது. ஆனால், பொதுவானது, இயற்கையானது என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதுமை என்பது ஒரு நோயாக இப்போது கருதப்படவில்லை என்பதன் பொருள், பல ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கையை மக்களுக்கு வழங்கக்கூடிய மருந்துகளைப் பரிந்துரைக்க மருத்துவர்கள் தயங்குவதுதான்.

    எனவே, முதுமை என்பது ஒரு நோய், குறைந்தபட்சம் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ நிலை என்று நாம் அறிவிக்க வேண்டும்.

    இது நமது தற்போதைய புரிதலில் இருந்து மிகவும் வித்தியாசமானது. ஏனெனில், இன்று நாம் முதுமையை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பார்க்கிறோம். ஆனால், நீங்கள் அப்படியில்லை என்றும் அதற்கு சிகிச்சையளிக்கலாம், தாமதப்படுத்தலாம் என்றும் சொல்கிறீர்கள். இது தீவிரமான திட்டம் இல்லையா?

    இது தீவிரமானது தான். ஆனால், விமானத்தை ஓட்டுவது அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பான்கள், கணினிகளைப் பயன்படுத்துவது ஆகியவையும் தீவிரமானவைதான்.

    ஆய்வகத்தில் முதிர்ச்சியடைவதைப் பின்னோக்கி வரச் செய்து இளமையை மீண்டும் கொண்டுவர முடிந்ததாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா?

    சிடியில் உள்ள கீறல்களை மெருகூட்டுவதைப் போல, எபிஜெனோமை பூஜ்ஜியமாக்குவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருந்தோம்.

    முதிர்ச்சிக்குப் பதிலாக இளமைக்குத் திருப்புவதை பாதுகாப்பாகச் செய்ய முடியுமா என்று பல மரபணுக்களை பரிசோதித்தோம். ஆனால், யமனகா காரணிகள் எனப்படும் மூன்று மரபணுக்களைக் கண்டறிந்தோம். அவை உயிரணுக்கள் தங்கள் அடையாளத்தை இழக்காமல் பாதுகாப்பாக முதுமையிலிருந்து மீண்டும் இளமைக்கு மாற்றும்.

    இது மனித தோல் செல்கள் மற்றும் நரம்பு செல்களில் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்ட எலிகளில் சோதனை செய்து பார்வை நரம்புகளுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் அவற்றின் பார்வையை மீட்டெடுக்க முடிந்தது.

    இது மனிதர்களுக்கும் எதிர்காலத்தில் வேலை செய்யுமா?

    முடியும் என்று நம்பும் முதலீட்டாளர்கள் உள்ளனர். கொறித்துண்ணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டு பாதுகாப்பு ஆய்வுகள் நம்பிக்கைக்கு உரிய வகையில் இருக்கின்றன. அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் மனிதர்களின் குருட்டுத் தன்மையைக் குணப்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க முதல் மனித பரிசோதனைகளுக்குச் செல்வோம்.

    அறிவியல் இதுவரை கண்டுபிடித்தது என்ன? முதுமை எய்தும் வேகத்தைக் குறைப்பதாக நீங்கள் குறிப்பிடும் மருந்துகள் பற்றி என்ன ஆய்வு செய்யப்படுகிறது?

    இயற்கையான மூலக்கூறுகள் செயற்கையான மூலக்கூறுகள் உள்ளன. அவை முதுமையின் வேகத்தைக் குறைப்பதிலும் உயிரினங்களின் ஆயுளை நீட்டிப்பதிலும் மனித ஆய்வுகளிலும் கூட நம்பிக்கையளிக்கும் வகையிலான ஆய்வு முடிவுகளைக் காட்டுகின்றன. அவற்றில் குறைந்தது இரண்டு மருந்துகள், சந்தைகளில் ஏற்கெனவே இருப்பவை.

    இரண்டாம் கட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இந்த மருந்துகளில் ஒன்றான மெட்ஃபோர்மினுக்கு நல்ல சான்றுகள் உள்ளன.

    நீரிழிவு இல்லாதவர்களை விட நீரிழிவு நோயாளிகள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறிகள் உள்ளன. ஓர் ஆய்வு இப்போது மெட்ஃபோர்மின் எடுத்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே, புற்றுநோய், இதய நோய் மற்றும் அல்சைமர் போன்றவை ஏற்படும் விகிதங்களை பகுப்பாய்கிறது.

    நாம் மரணமின்றி என்றென்றும் வாழ முடியுமா ?

    கண்டிப்பாக இல்லை என்கிறார் சின்க்ளேர்.

    ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இந்த கண்டுபிடிப்புகளின் தாக்கம் என்னவாக இருக்கும்?

    90 வயதிலும் அதற்கு அப்பாலும் ஆரோக்கியமாக இருப்பது, பல தொழில்களில் ஈடுபடுவது, கொள்ளு பேரக் குழந்தைகளுடன் விளையாடுவது, பிள்ளைகளுக்கு பாரமாக இல்லாமல் இருப்பது போன்ற பல தனிப்பட்ட நன்மைகள் உள்ளன.

    நானும் சில லண்டன் பொருளாதார வல்லுநர்களும், இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆயுட்காலத்தை நீட்டிப்பது அடுத்த சில பல்லாண்டுகளில், அமெரிக்காவில் மட்டும் எப்படியிருக்கும் எனப் பகுப்பாய்ந்து பார்த்தோம். 86 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரத்தின் மதிப்பை அதிகரிக்கும் என்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை 10 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், அது 300 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார மதிப்பை அதிகரிக்கும்.

    முதுமையைத் தடுப்பது குறித்த ஆய்வுகள், மெர்ரில் லின்ச் வங்கியால், பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களில் மதிப்பிடப்பட்டுள்ள ஒரு தொழில் ஆகும். மேலும் இது விரைவில் நூற்றுக்கணக்கான பில்லியன்களை எட்டலாம். இதில் ஏன் இவ்வளவு பணமும் ஆர்வமும் முதலீடு செய்யப்படுகிறது?

    இது உலகின் மிகப்பெரிய தேவைகளில் ஒன்றாகும். இந்த முன்னேற்றங்களால் பயனடையாத ஒரு நபர் இந்த பூமியிலேயே இல்லை.

    நோய்க்கு எதிராக உடலின் இயற்கையான பாதுகாப்பை மேம்படுத்தும் திறன் உலகையே புரட்சிகரமாக்கும். பல்லாண்டுகளுக்கு உலகப் பொருளாதாரத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை சேமிக்கும். நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு முன்பு இருந்த நமது உலகத்திலிருந்து இப்போது இருக்கும் உலகத்திற்கு மாறியதைப் போலவே, இதுவும் வேறுபட்ட ஒரு உலகத்தை உருவாக்கும்.

    முதுமை அடைவதைத் தாமதப்படுத்தும் அல்லது மாற்றியமைக்கும் நோக்கத்துடன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கும் சில நிறுவனங்களுடன் நீங்கள் சேர்ந்து செயல்படுகிறீர்கள். நாம் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ உதவுவதை இலக்காகக் கொண்ட ஓர் ஆராய்ச்சியாளராக இல்லாமல், இதிலிருந்து லாபம் தேட முயல்பவராக நீங்கள் தோற்றமளிக்கக்கூடும் என்று நீங்கள் கவலைப்படவில்லையா?

    மக்களை ஆரோக்கியமானவர்களாக உருவாக்குவதே எனது குறிக்கோள். மேலும் மருந்துகளை உருவாக்குவதற்கான ஒரே வழி, அதை உருவாக்கும் குழுக்களை உருவாக்குவதுதான். அதைத்தான் செய்கிறேன்.

    ஒரு தொழிலதிபராக இல்லாமல், ஓர் ஆராய்ச்சியாளராக இதை உங்களால் செய்ய முடியவில்லையா?

    இல்லை. ஒரு மருந்து தயாரிக்க மில்லியன் கணக்கான டாலர்கள் தேவை.

    ஆனால், இந்த நிறுவனங்களில் உங்கள் ஈடுபாடு சிலருக்கு நீங்கள் விளம்பரப்படுத்தும் அறிவியலை சந்தேகிக்க வைக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

    என் விஞ்ஞானம் தனித்து நிற்கிறது. அது ஒருபோதும் தவறு என்று நிரூபிக்கப்படவில்லை.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....