தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொடர்ந்து முன்றாவது நாளாக 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாள்தோறும் 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி முழு அளவில் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.
இந்நிலையில், கோடைகால மின்சார தேவைக்காக ஐந்து பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், நிலக்கரியின் கையிருப்பு தட்டுப்பாட்டால் 5 பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்வது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தடைபட்டுள்ளது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 5 பிரிவுகளிலும் முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால், அனல் மின் நிலையத்தில் நான்கு அல்லது மூன்று பிரிவுகள் அவ்வப்போது இயக்கப்பட்ட நிலையில், தற்போது நிலக்கரி இருந்தும் கடந்த 5 நாட்களாக 4 பிரிவுகள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
3வது பிரிவுகளில் மட்டுமே 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1, 2, 3, 4, 5 ஆகிய பிரிவுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தற்போது 15,000 டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஒன்றிய அரசு நிலக்கரியை முறையாக வழங்கவில்லை என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே ஒரு அலகில் மின்உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 5வது நாளாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்களில் மின் தடை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள்; ஐ.நா வெளியிட்ட அறிக்கை!