ஷ்ரத்தா வழக்கில் கொலையாளிக்கு கடும் தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தில்லியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, காதலன் அப்தாப்வால் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வழக்கு நாட்டையே உலுக்கியது.
இதில் குற்றவாளியான அப்தாப் கொலையை அவரே செய்ததாக ஒப்புக்கொண்டார். ஷ்ரத்தாவை கொலை செய்துவிட்டு 35 துண்டங்களாக வெட்டி, அவற்றை தில்லியின் பல பகுதிகளில் வீசியதும் வாக்குமூலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு காதலன் அப்தாப் தன்னை துன்புறுத்துவதாகவும், தன்னை துண்டு துண்டாக வெட்டப் போவதாக ஷ்ரத்தா தனது கைப்பட எழுதி காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கின் விசாரணை மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதனிடையே தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஷ்ரத்தா வழக்கில் குற்றவாளியான அப்தாப்புக்கு கடும் தண்டனை கிடப்பது உறுதி செய்யப்படும். இந்த தண்டனை குறுகிய காலத்தில் கிடைப்பதை தில்லி காவல்துறையும் விசாரணை அமைப்பும் உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.