கர்நாடகாவில் தொடர்ந்து வரும் ஹிஜாப் விவகாரம் மேலும் பதற்ற சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
எங்கள் உடை எங்கள் உரிமை என்று இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்ததும் சில இந்து மாணவர்கள் காவித்துணிகளை அணிந்து வந்து, அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவித்துணிகளை அணிவோம் என்று போராட்டத்தில் குதித்தனர். இன்னும் சில மாணவர்கள் அம்பேத்கரை பின்பற்றுவதாக நீலத்துணிகளை அணிந்து வந்தனர். காவித்துணி அணிந்தவர்கள் இஸ்லாமிய பெண்ணை எதிர்ப்பது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த காணொளி காட்டுத்தீ போல பரவி கர்நாடகாவில் உள்ள மற்ற இடங்களிலும் மாணவர்களிடையே மத வேறுபாடு உருவானது. இதனை தொடர்ந்து பல கல்வி நிலையங்களிலும் மாணவர்கள் காவித்துணி, ஹிஜாப் அணிந்து வர ஆரம்பித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் மாண்டியா, பாகல்கோட், உடுப்பி மாவட்டங்களில் இரு தரப்பினர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தில் கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியும் அரங்கேறியது.
இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப், காவித்துணிகளை அணியாத மாணவர்களை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே ஹிஜாப் அணிந்துவர அனுமதி கோரி மாணவிகள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா எல்.தீட்சித் மாணவர்களும் பொதுமக்களும் அமைதிகாக்க வேண்டும் எனவும், இந்திய அரசியலமைப்பு சட்டம் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி தீட்சித் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
தொடரும் பதற்ற சூழ்நிலை காரணமாக கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் 3 நாட்களுக்கு, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு ட்விட்டரில் கேட்டுக்கொண்டார்.
தீவிரமடையும் ஹிஜாப் விவகாரத்தால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் இந்த செய்தியை பற்றி அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.https://www.dinavaasal.com/separate-classroom-for-hijab-wearing-students/