கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு, அவரின் பெற்றோர் ஒத்துழைப்பு தர மறுப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற வழக்கில், ‘வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது . இந்நிலையில், வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு ,தற்போது அவர்கள் விசாரித்து வருவதால், இந்த மனுவை ஏன் முடித்து வைக்கக் கூடாது என்று கேள்வி நீதிபதி எழுப்பினார்.
அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வருகிறது. ஏற்கெனவே, இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும், வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தகட்டை தங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: ‘ஃப்ரீ ஃபயர் கேம்’ பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்…..நீதிபதிகள் தெரிவித்த கருத்து!
இதைத்தொடர்ந்து பேசிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ‘ஏற்கெனவே இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது’ என்றார்.
மேலும், ‘இந்த வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுக்கின்றனர். விடுதியில் மாணவி பயன்படுத்திய கைப்பேசியை வழங்கவும், மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்கவும் அவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்’ என்றும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவி கைப்பேசி பயன்படுத்தி இருந்தால், அதை புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீஸாரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதி தாக்கல் செய்யுமாறு நீதிபதி சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.