கிராமங்களில் தான் அதிகளவு கோயில் திருவிழாக்கள் நடைபெறுகிறது. பெருநகரங்களில் ஆங்காங்கே திருவிழாக்கள் நடைபெறுவதையும் நாம் காணலாம். திருவிழா என்றாலே ஆடலும், பாடலும் நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.
கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக, திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில், திருவிழாக்களில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை சில நிபந்தனைகள் உடன் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பல கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவிழாக்களின் போது ஆடலும், பாடலும் கலை நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காததை எதிர்த்து, பல மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் குவிந்தது. இந்த வழக்குகளின் முந்தைய விசாரணையில், காரணமின்றி காவல்துறையினர் எதற்காக அனுமதி அளிக்க மறுக்கின்றனர் என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
தென்காசியைச் சேர்ந்த துணை காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளித்தார். அதில், அனைத்து சமுதாய மக்களும் இணைந்து ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், கலை நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறினார்.
இதனையடுத்து நீதிபதி தெரிவிக்கையில், இரு சாதியினர் இடையேயும் அல்லது இரு தரப்பினர் இடையேயும் ஏற்கனவே பிரச்சனைகள் இருந்தால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம். ஆனால், அனைத்து மக்களும் ஒன்று கூடுவது தவறல்ல. இதனை இந்த நீதிமன்றம் ஏற்காது. வெளியூரில் வேலை செய்யும் பொதுமக்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று ஒன்று கூடி கொண்டாடுவது தான் திருவிழாக்கள். திருவிழாக்களின் போது மின் இணைப்பிற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெறுவது என்பது பாதுகாப்பிற்காக மட்டுமே. இது தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்துள்ளது.
தங்களது வேலையை காவல்துறை சரியாக செய்யவில்லை என்பதை இது காட்டுகிறது. திருவிழாக்களில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சிகளை காவல்துறையினர் நடத்த முடியவில்லை எனில் விலகிக் கொள்ளலாம். ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதற்காகவே காவல்துறையினர் உள்ளனர்.
ஆடலும், பாடலும் நிகழ்ச்சிகளை நடத்த விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். ஆபாச நடனங்கள் மற்றும் வார்த்தைகள் இடம் பெறக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து ஆடலும், பாடலும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்; வியாழக்கிழமை நிலவரம்..