சென்னையில் அதிகாலையில் இருந்து பெய்த கன மழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிற நிலையில் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருக்கிறது.
இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக விமானிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் என அனைவரும் விமான நிலையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய பாங்காங், துபாய், கத்தார், இலங்கை, சிங்கப்பூர் போன்ற விமானங்களும், அதேபோல் மும்பை, கொல்கத்தா, அந்தமான், விஜயவாடா, மதுரை, திருச்சி போன்ற உள்நாட்டு விமானங்களும், சுமார் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை கால தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
மேலும், பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் சரியாக குறித்த நேரத்தில் தரை இறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அடாத மழையிலும் மிதக்கதா சென்னை: பட்டியலிடும் அமைச்சர் கே என் நேரு