முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை திருமாவளவன், வைகோ சீமான் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
ஆறு பேருக்கு விடுதலை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து திருமாவளவன், ‘விசிக இந்த தீர்ப்பை வரவேற்கிறது. நீண்டநாள் ஏக்கம் நிறைவேறி இருக்கிறது. காலம் தாழ்ந்த தீர்ப்பு என்றாலும் இது ஆறுதல் தருகிறது. பேரறிவாளனின் தொடர் போராட்டம் 6 பேரின் விடுதலைக்கு வழி வகுத்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ’30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழு பேருக்கு விமோசனம் பிறந்துள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
‘ராஜீவ் காந்தி வழக்கில் மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்புக்காக சட்டப் போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பேரன்பும்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 6 பேர் விடுதலை: 30 ஆண்டுகால போராட்டத்திற்கும்., மனித உரிமைக்கும் கிடைத்த வெற்றி..! மு க ஸ்டாலின்