கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து நாளை காலை வட தமிழக கடலோர பகுதியின் அருகில் வந்தடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழக பேரிடர் மீட்பு படையினர் கொண்ட 10 குழுக்கள் திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக அரக்கோணத்தில் இருந்து மீட்பு படையினர் தஞ்சை மாவட்டத்திற்கு இன்று சென்றுள்ளனர். 25 பேர் கொண்ட இந்தக்குழு மாவட்டத்தின் பல முக்கிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் மழை வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
திரையரங்கில் புதிய திட்டம்; தாய்மார்களுக்காக கேரள அரசு அதிரடி…