காதல் மாதத்தின் காதல் வாரம் உலகெங்கிலும் காதலர்கள் மத்தியில் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரோஸ் டே முடிந்து, புரோபஸல் டே கழிந்து இன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்கள் இணைகளுக்கு, ஏற்கனவே இணையாய் உடன் வாழ்பவர்களுக்கு, இணையாய் வாழப்போகிறவர்களுக்கு என பல கட்டங்களில் காதலின் நிமித்தமாய் இனிப்புகளை பகிரும் நாள்தான் இன்று!
அயல் நாடுகளில் இன்று, இணைகள் ஒன்றாக இணைந்து இனிப்புகளை கைப்பட செய்து மகிழ்ந்து உண்பர். இந்நாள், மனிதர்கள் தங்கள் இணைகளுடன் மகிழ்ச்சிகரமாக குறும்பாக நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகவே உருவானதாகவும் கூறல்கள் உண்டு!
ஆனால், காலப்போக்கில் இனிப்புகளை வாங்கி போகிறப்போக்கில், தங்கள் இணைகளுக்கு தந்துவிட்டு போவதாக இந்நாள் மாறியுள்ளது. குறிப்பாக, வர்த்தக நோக்கில் இந்நாள் பலவாய் மாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. கேட்பரி போன்ற பல நிறுவனங்கள் இந்த மாறுதலுக்கு அடித்தளம் வித்திட்டதாக உலகின் பல நாளிதழ்கள் தெரிவித்துள்ளன, நிரூபித்துள்ளன.
இனிப்பை வெறுமனே பகிர்வதினால்
ஒன்றும் ஆகப்போவதில்லை
அதன் வழியே
காதலை பாய்ச்சும் போதுதான்
இனிப்பு அத்தனையுமாய் மாறிப்போகிறது.
எது எப்படியாக இருந்தாலும், தற்காலத்தில் குறைந்தபட்சம் இனிப்புகளை பகிர்தலாவது இணைகளுக்குள் நிகழ வேண்டும் என்பதை முன்மொழிந்தே இன்றைய நாள் அமைந்திருக்கின்றது. அந்த பகிர்தல், அன்பும் குறும்பும் மகிழ்வும் நிறைவதாய் அமையட்டும்!
பல இணைகளும் இன்றைய நாளை கொண்டாடித் தீர்க்க, கொண்டாடும் படியான சூழல்கள் அமைய, சூழல்களை உருவாக்கி கொண்டாட, தூரத்தில் இருந்தாலும் அன்பை பிரத்யேகமாக பகிர, காதலும் வாழ்தலும் இனிக்க, தினவாசல் சார்பாக வாழ்த்துகள்!
ரோஸ் டே: சொல்லப்படும் காரணங்கள், ‘கிரிஞ்ச்’ என்ற கொல்லி… அனைத்தையும் மீறி பூக்கும் காதல்!