குஜராத் மோர்பி பால விபத்து தொடர்பான குற்றப்பத்திரிகை இன்று அம்மாநில அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது கடந்த 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 230 மீட்டர் நீள தொங்கு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலமானது சுற்றுலாவிற்கு வரும் முக்கிய இடமாக திகழ்ந்து வந்த நிலையில், அந்த பாலத்தில் 6 மாதங்களாக தனியார் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்தப் பாலத்தில் தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் மக்கள் குவிந்தனர்.
அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர். இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 135-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயத்திற்கு உள்ளாகினர். இந்த விபத்து சமந்தமாக வழக்குகள் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் 9 பேர் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், 1200- பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகை இன்று குஜராத் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையில், ஒரேவா குழுமத்தின் ஜெய்சுக் படேல் பெயர் குற்றவாளிகளின் பெயரில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மோர்பி தொங்கு பாலத்தின் புனரமைப்புப் பணிகளை ஒரேவா நிறுவனம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்த விண்கல்; அப்டேட் சொன்ன நாசா