புதுச்சேரியில் கனமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும், அனைத்து துறைகளையும் விழிப்புணர்வுடன் இருக்க உத்தரவிட்டுள்ளதாகவும், 238 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இப்புயலை எதிர்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம் புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவையில் உள்ள கேபினட் அறையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வளர்ச்சி ஆணையர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் வல்லவன், காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, மின்துறை, தீயணைப்புத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் கனமழை மற்றும் புயலை எதிர்கொள்ள அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, வரும் 8-ம் தேதி முதல் கனமழை இருக்கும், காற்று வேகமாக வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய்யம் கூறியுள்ளனர் என்றும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அனைத்து துறைகளுக்கும் தேவையான உதவிகளை நிதி துறை மூலம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வருவாய்துறை தலைமையில் அனைத்து துறைகளும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்படுவார்கள்.
இதற்காக 238 முகாம் தயார் நிலையில் உள்ளது. 75,000 நபர்களுக்கு அட்சய பாத்திரம் மூலம் உணவு தயாரித்து வழங்கப்படும். தேவைப்பட்டால் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் உணவு வழங்கப்படும் என்று கூறிய அவர், ஒவ்வொரு துறையும் விரைவாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர், அவர்களும் தயார் நிலையில் உள்ளனர் என கூறினார்.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு