28 வருடங்களாக காத்திருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உலகக் கோப்பை கனவை நிறைவேற்றிய மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள்!
‘தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2019 வரை இந்திய அணிக்காக விளையாடினார். இவர் இந்திய அணிக்காக விளையாடிய காலத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார்.
44-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் மகேந்திர சிங் தோனியின் முக்கிய சாதனைகளை இந்தக் கட்டுரையில் காண்போம்:
- ஒருநாள் தொடருக்கான உலகக் கோப்பை, இருபது ஓவர் தொடருக்கான உலகக் கோப்பை, ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி வென்றுள்ளார்.
- இருபது ஓவர் உலகக் கோப்பையை முதன் முதலில் வென்ற கேப்டன் என்ற பெருமை மகேந்திர சிங் தோனியையே சேரும். 2007-ம் ஆண்டு முதன் முதலில் தொடங்கப்பட்ட இருபது ஓவருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக பதவி வகித்தவர், மகேந்திர சிங் தோனி.
- இலங்கைக்கு எதிராக 2005-ம் ஆண்டு தோனி குவித்த 183* ரன்கள்தான் இன்று வரை ஒரு விக்கெட் கீப்பரால் குவிக்கப்பட்ட அதிக ரன்களாகும். அதேப் போட்டியில், இவர் பத்து சிக்சர்கள் அடித்தார். ஒரு இந்திய வீரர் ஒரே போட்டியில் பத்து சிக்சர்கள் அடித்தது அதுவே முதல் முறையாகும்.
- சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் 5-வது முதல் 7-வது ஆட்டக்காரர்களாக களமிறங்கியவர்களில் அதிக ரன்கள் குவித்த சாதனையை தோனி தன்னிடத்தில் வைத்துள்ளார். ஆம், அவர் குவித்த ரன்கள் 8000.
- 41 வருடங்கள் கழித்து, 2009-ம் ஆண்டு நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் வீழ்த்திய இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி.
- தொடர்ந்து ஆறு இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ஒரே வீரர் மகேந்திர சிங் தோனிதான். அதேபோல், இருபது ஓவர் போட்டிகளில் 100 ஸ்டம்பிட்டுகள் செய்த ஒரே வீரரும் இவர்தான்.
- மார்க் பவுச்சர், ஆடம் கில்கிறிஸ்ட்-டுக்குப் பிறகு விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்டுகளை மகேந்திர சிங் தோனி வீழ்த்தியுள்ளார். அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 829.
- ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளுக்கு தான் தலைமைத் தாங்கிய அணியை வெற்றிப் பெற வைத்த வீரர் மகேந்திர சிங் தோனி. மேலும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரே கேப்டனும் இவரே.
- 2008-ம் ஆண்டு இந்தியாவில் விளையாட்டு வீரருக்கு தரப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது தோனிக்கு வழங்கப்பட்டது.
- 2009-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருதையும், 2018-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் மகேந்திர சிங் தோனி பெற்றார். ஐசிசி-யின் 2008 மற்றும் 2009-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராகவும் இவர் தேர்வு செய்யப்பட்டார்.
- 2011 முதல் 2020-ம் ஆண்டு வரை சிறப்பாக விளையாடியதுக்காக ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் என்ற விருது தோனிக்கு வழங்கப்பட்டது.
இதுவரை, பல சாதனைகளையும், பல விருதுகளையும் பெற்றுள்ள தோனி மென்மேலும் சாதனைகள் புரிந்து, மகிழ்வுற்று வாழ தினவாசல் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு