கர்நாடக மாநிலத்தில் பண்டுவால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கூலித் தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், பண்டுவால் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவு வீட்டின் மீது விழுந்ததால், அதில் இருந்த 3 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். இவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த தொழிலாளர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், உத்தர கன்னடாவைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பண்டுவால் பகுதியில் குடிசை அமைத்து தங்கி, அங்கிருக்கும் ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, அவர்கள் தங்கியிருந்த குடிசை மண்ணுக்குள் புதைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அங்கு, புதைந்திருந்த ஜானி (வயது 44) என்பவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், பிஜு (வயது 45), சந்தோஷ் (வயது 46), பாபு(46) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பண்டுவால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை!