நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமாருக்கு எதிராக அவரது சகோதரிகள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், மகன்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது, அவர்களது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“ தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் விற்பனை செய்துவிட்டார்கள். இதோடு, சில சொத்துகளை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்துவிட்டனர்.
மேலும், பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் தாங்களாகவே உயில் ஒன்றைத் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டனர். ஆகையால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையீட்டு தங்களுக்கு சேர வேண்டிய சொத்துகளை மீட்டுத்தர வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
சிவாஜி கணேசன் தனது 72-வது வயதில், 2001-ம் ஆண்டு 21-ம் தேதி ஜூலை மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.