எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் -ஐ தொற்றால் பாதிக்கப்பட்டு தினசரி 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருவதாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
‘மெட்ராஸ் – ஐ’ என்பது விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று. இந்தத் தொற்று காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். மேலும், ‘மெட்ராஸ் ஐ’ பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவர்களுக்கு அந்நோய்த் தொற்று பரவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘மெட்ராஸ் – ஐ’ தொற்றுக்கு அறிகுறிகளாக, கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை உள்ளன. ஒரு கண்ணில் ‘மெட்ராஸ் – ஐ’ பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இப்படியான ‘மெட்ராஸ்-ஐ’ பாதிப்பு சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 5 என்று இருந்த ‘மெட்ராஸ்-ஐ’ பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது தினசரி 50 என்ற நிலையை எட்டியுள்ளதாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
‘மெட்ராஸ்-ஐ’ தொற்றால் பாதிக்கப்பட்டு தினசரி 50-க்கும் மேற்பட்டோர் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். அவர்களுக்கு அனைவருக்கும் உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடு என்ற நிலை ஏற்படவில்லை.
‘மெட்ராஸ் – ஐ’ தொற்றால் பாதிக்கப்படுவோர், தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மெட்ராஸ்-ஐ பாதிப்பு ஐந்து நாள்களில் குணமடைய கூடியதுதான். அதேவேளையில் அலட்சியப்படுத்தினால் பார்வை இழப்புகூட நேரிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட்.. ரசிகர்கள் கனவு பலிக்குமா?