ஒன்றிய அரசு புதிய தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டத்தில் புதிய சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய தொழிலாளர் சட்டமானது தொழிலாளர்களின் வேலை நேரம், ஊதியங்கள், விடுமுறைகள், வருங்கால வைப்பு நிதிகள் ஆகியவற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது குறித்த அறிக்கைகளின்படி, 23 மாநிலங்கள் புதிய ஊதியக் குறியீடு 2019 மற்றும் தொழிற்துறை உறவுகள் குறியீடு 2020, சமூகப் பாதுகாப்புக்கான குறியீடு, 2020 மற்றும் தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் மாநில தொழிலாளர் குறியீடுகள் மற்றும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
வேலைநேரத்தைப் பொறுத்தவரையில் புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, வாராந்திர வேலை நேரம் 48 மணி நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது. நான்கு நாள் வேலை, மூன்று நாள் விடுமுறை என்பதை அந்நிறுவனங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், தொழில்துறைகளுக்கான கூடுதல் நேரம் 50 மணிநேரத்தில் இருந்து 125 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய சட்டத்தில் வைப்புநிதியானது மிகவும் அதிகரித்தும், வீட்டுக்குக் கொண்டுச்செல்லும் ஊதியமானது குறைவும் வாய்ப்புள்ளது.
புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஊழியர்களின் விடுப்புத் திட்டங்களை பகுத்தாய்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வருடத்துக்கென ஒதுக்கப்பட்ட விடுமுறை நாட்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும். அதேசமயம், ஊழியர்கள் இப்போது 45 நாட்களுக்குப் பதிலாக ஒவ்வொரு 20 நாட்களுக்கும் ஒரு விடுமுறையை பெறுவார்கள். மேலும், புதிய ஊழியர்கள் 240 நாட்களுக்கு பதிலாக 180 நாட்களுக்குப் பிறகு தங்களது விடுமுறையை பெறுவார்கள்.
மேலும், இந்த புதிய தொழிலாளர் சட்டமானது இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘முதல் நீ முடிவும் நீ’ என அவன் பாட ; அவள் அழுதாள்…பார்த்த நாமும்தான்! – சிறப்பு பார்வை