இந்தியாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தின் வடிவமைப்பு, இந்திய அரசு சின்னங்களுக்கான சட்டத்தை மீறியுள்ளதாக உச்சநீதிமன்றத்திடம் ஜூலை 22-ம் தேதி அன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் அல்தானிஷ் ரெய்ன் மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர், புதிதாகக் கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள நான்குமுக சிங்கமானது, பற்கள் வெளியே தெரியும் வகையில், கோபமாகவும், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் வகையிலும் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேசிய சின்னத்தின் வடிவமைப்பு வெளிப்படையாக, நியாயமற்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட நான்குமுக சிங்கங்கள் மீது மனு தாக்கல் செய்திருந்த வழக்குரைஞர்கள் அல்தானிஷ் ரெய்ன் மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர் தங்கள் வாதத்தில் கூறியுள்ளதாவது:
‘இந்தியக் குடியரசின் அடையாளத்தை உணர்த்தும் விதமாக நமது தேசிய சின்னம் உள்ளது. இந்தியக் குடியரசானது மக்களுக்கு சொந்தமானது. இந்திய தேசிய சின்னத்துக்கு, அரசால் ஏதேனும் தேவையற்ற இடைஞ்சல்கள் வரும்போது, இந்திய மக்களின் தேசிய உணர்வை காயப்படுத்தும் விதத்தில் மாறிவிடுகிறது.’ இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்திய அரசு சின்னங்களுக்கான சட்டம் (முறையற்ற பயன்பாட்டுக்கான தடை) 2005ஐ மீறும் விதத்தில் புதிதாக திறக்கப்பட்ட நான்குமுக சின்னம் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இந்த நான்குமுக சின்னம், கடந்த ஜூலை 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது. புதிதாகத் திறக்கப்பட்ட இந்த நான்கு முக சின்னத்துக்கு, இந்து மத முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டது குறித்து எதிர்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டது.
மேலும், அசோகரால் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் உண்மையான தேசிய சின்னத்தில் இருக்கும் ‘அழகு மற்றும் நம்பிக்கை’யை சிதைக்கும் வகையில் மத்திய அரசு, புதிதாக திறக்கப்பட்ட நான்கு முக சின்னத்தை கோபமாகவும், ஆக்ரோஷத்துடனும் வடிவமைத்துள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
ஆக்ரோஷத்துடன் காணப்படும் இந்திய தேசிய சின்னம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்