இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று (ஜூலை 25) பதவி ஏற்றுக்கொண்டார்.
கடந்த ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.
இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. இதில் திரௌபதி முர்மு, நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் 2,824 எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும் 540 எம்.பி-க்களின் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 25) காலை 10 மணி அளவில் தில்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திரௌபதி முர்முவின் பதிவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முப்படை தலைமை தளபதிகள் மற்றும் மூத்த தளபதிகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
முன்னதாக, திரௌபதி முர்மு தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று (ஜூலை 25) காலை மரியாதை செலுத்தினார்.
ராம்நாத் கோவிந்துக்கு தில்லியில் பிரிவு உபசார விழா