இலங்கை மக்கள் யாரும் நோய்வாய்ப்படவோ, விபத்திலோ சிக்கிக்கொள்ள வேண்டாம் என இலங்கை நாட்டு மருத்துவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருள்களைக் கூட மக்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தால் அத்தியாவசிய பொருள்களான எரிபொருள், உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இலங்கை நாட்டின் மருத்துவர்கள் சிலர், சமூக ஊடகங்களின் வழியாக மருந்து பொருள்களையும், மருந்து பொருள்கள் வாங்குவதற்கு நன்கொடைகளையும் திரட்ட முயற்சித்து வருகின்றனர். மேலும், வெளிநாட்டினரிடம் உதவிகள் கேட்க இலங்கை மக்களிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இலங்கையில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை, முக்கியமான மருந்துகள் அடங்கிய பட்டியல் ஒன்றை இலங்கை சுகாதாரத்துறைக்கு அனுப்பியிருந்தது.
இந்த பட்டியல் பற்றி கூறிய டாக்டர் நடராஜா ஜெயகுமரன், ‘அனைத்து மருத்துவமனைகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய மருந்துகள் அடங்கிய பட்டியலை அனுப்பியுள்ளோம்; இந்த மருந்துகள் இருந்தால் தான் தடையின்றி சிகிச்சைகள் கொடுக்க முடியும். எனினும் மருந்துகளைக் கொடுக்க அரசாங்கம் சிரமப்பட்டு வருகிறது.’ என்று கூறியுள்ளார்.
மேலும், கீமோதெரபி செய்து கொண்ட நோயாளிகள் தொற்று நோய்களால் எளிதில் பாதிக்கப்படுவார்கள்; அவர்களால் பொதுவான உணவுகளை உட்கொள்ள முடியாது. ஆனால் மருத்துவமனைகளில் போதுமான உணவு கையிருப்பு இல்லை என டாக்டர் ஜெயகுமாரன் கூறியுள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளிடம் உதவிகள் கேட்டுள்ளார். உலக வங்கி, ஆசிய வங்கி போன்ற நிறுவனங்கள் அடுத்த ஆண்டு இறுதி வரை மருந்து பொருள்கள் வழங்குவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
மாலத்தீவில் இருந்து வெளியேறினாரா கோத்தபய ராஜபக்சே?