புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அரசியல் நாடகம் ஆடுகிறார் என்றும், தனக்கு பிரச்சனை என வந்தால் மாநில அந்தஸ்தை கையில் எடுக்கிறார். ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் வேறு ஒருவரை முதலமைச்சராக நியமித்து மாநில அந்தஸ்து பெறுவோம். என அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், புதுச்சேரி மாநில அந்தஸ்துக்கு அதிமுகவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போதும் எடப்பாடி பழனிச்சாமி இருந்த போதும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், மாநில அந்தஸ்து தொடர்பாக சமூக அமைப்பினர் மனு அளித்தபோது தன்னுடைய குமுறல், கோபம், ஆதங்கத்தை முதலமைச்சர் ரங்கசாமி வெளிப்படுத்தியுள்ளார் என்றும், முதலமைச்சர் ரங்கசாமி அரசியல் நாடகம் ஆடுகிறார் என்றும், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த போது மாநில அந்தஸ்து தொடர்பாக சிறு துரும்பை கூட போட்டதில்லை.
முதலமைச்சருக்கு பிரச்சனை என வந்தால் மாநில அந்தஸ்தை கையில் எடுக்கிறார். சிலரை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகிறார். அண்டை மாநில எதிர்கட்சிகள் கூட டெல்லி சென்று மக்கள் நலனுக்காக திட்டங்களை வாங்கி வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி இதுவரை போகவில்லை. தற்போது மதுபான அனுமதி பிரச்சனை தொடர்பாக பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையை திசை திருப்பவும், மக்களை திசை திருப்பவும் மாநில அந்தஸ்தை கையில் எடுத்துள்ளார். மாநில அந்தஸ்து என்று கூறி பொது மக்களையும் அரசியல் கட்சிகளையும் போராட்டம் நடத்த தூண்டி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், புதுச்சேரி குட்டிச்சுவரானதுக்கு ரங்கசாமியே காரணம் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் இதுவரை ஒரு நாள் கூட டெல்லி சென்று மாநில அந்தஸ்து பற்றி வலியுறுத்தியது இல்லை. கேட்டால் தான் கிடைக்கும் டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தால் தானாக வராது என்றும் சட்டசபையில் போட்ட தீர்மான கோப்புகள் என்ன ஆச்சு, ஆளுநர் ஒரு கோப்பை கூட நிறுத்தவில்லை என்று கூறுகிறார் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய வையாபுரி மணிகண்டன், ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு கூறு நிதி 2 ஆயிரம் கோடியை முதலமைச்சர் வேறு துறைக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்பதால் அதிகாரிகள் சரியில்லை என்று குற்றம் சொல்வதாகவும் கண்டனம் தெரிவித்த மணிகண்டன், அதிகாரம் இல்லை என்று புலம்பும் முதலமைச்சர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க தயாரா எனவும் கேள்வி எழுப்பினர்.
முதலமைச்சர் ரங்கசாமி வேஷம் போடுகிறார் அவர் வேஷத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். தொடர்ந்து இதேபோன்று மக்கள் மத்தியில் ரங்கசாமி நாடகம் நடத்தினால் அவருடைய 3 தொகுதியில் டெபாசிட் இழக்க கூடிய நிலை ஏற்படும் என காட்டமாக கூறிய அவர். ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் வேறு ஒருவரை முதலமைச்சராக நியமித்து பாராளுமன்ற தேர்தலுக்குள் மாநில அந்தஸ்து பெறுவோம் என்றும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதுதான் அதிமுக நிலைபாடு ஆனால் அதை வைத்து யாரும் நாடகம் நடத்தக்கூடாது என்று தெரிவித்தார்.