அசாம் மாநிலத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர் செய்த அறுவை சிகிச்சை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள கரீமகஞ்ச் மாவட்டத்தில் வசித்து வந்த கரப்பிணிப் பெண்ணுக்கு வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தக் கர்ப்பிணிப் பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கர்ப்பிணிப் பெண்ணுக்கு வலி ஏற்பட்டதால், பலரும் இதை பிரசவ வலி என்றே கருதியுள்ளனர். ஆதலால், அப்பெண்ணுக்கு உடனடியாக சிசேரியன் செய்யப்பட்டது.
சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்த போதுதான், அக்குழந்தை குறைப் பிரசவத்தில் இருந்தது தெரிய வந்தது. முறைப்படி பார்த்தால் அதன் பின்னர், குழந்தைக்கும் தாய்க்கும் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். ஆனால், மருத்துவர் அதைச் செய்யாமல் வெளியே எடுத்த குழந்தையை மீண்டும் பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே வைத்துத் தைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அந்த கர்ப்பிணிப் பெண்ணை 11 நாட்கள் தொடர்ச்சியாக மருத்துவமனையில் தங்கவைத்துள்ளனர். இந்நிலையில், அப்பெண் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், அப்பெண்ணுக்கு பிரசவ தேதியாக டிசம்பர் 9-ம் தேதி தரப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் அப்பகுதியில் தீயாய் பரவியது. தகவல் பரவியதையடுத்து மருத்துவமனைக்குள் திரண்டு வந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தேதியைக் கூட ஆராயாமல் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் மக்கள் கோஷமிட்டனர். மேலும், இது தொடர்பாக கரீம்கஞ்ச் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை இது தொடர்பாக அங்கு விசாரணையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனை தரப்புக்கும், கர்ப்பிணிப் பெண் தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் ஒரு சமரச முடிவை எட்டிவிட்டதாக கரீம்கஞ்ச் காவல்துறை நிலைய பொறுப்பாளர் கூறினார்.
ஆம்புலன்ஸ் கதவே எமனான சோகம்.. அதிர்ச்சி சம்பவம்