கேரள மாநிலத்தில் ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால், நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு, கருவன் துருத்தி என்ற பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் கோயாமோன் . இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் வேலை முடிந்து வீடு திரும்பிய போது சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். பின், அங்கிருந்தவர்கள் கோயாமோனை அருகில் இருக்கும் பீச் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், அவருக்கு அந்த பீச் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கோயாமோனின் உடல்நிலை மிகவும் மோசமானது.
இதன் காரணமாக, அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இவருடன் இவரின் நண்பர்கள் இருவரும், ஒரு மருத்துவரும் உடன் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அடைந்ததும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் கதவை திறக்க முயன்றார். ஆனால், ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியவில்லை. மேலும், உள்ளே இருந்தவர்கள் திறக்க முயன்றும் முடியவில்லை.
பின்பு, ஆம்புலன்ஸ் கதவை உடைக்க முயன்று கோயாமோனை காப்பற்ற முயன்றனர். இதைத்தொடர்ந்து, கோடாரி கொண்டு ஆம்புலன்ஸ் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது. பிறகு, கோயாமோன் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் உயிர் பிரிந்தது.
சுமார், அரை மணி நேரத்துக்கும் மேலாக நோயாளி ஆம்புலன்ஸ்க்குள்ளே இருந்ததால், அவரது உயிரைக் காப்பற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து, 15 நாள்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ்களின் தகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என மருத்துவக் கல்லூரி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கோழிக்கோடு ஆர்.டி.ஓ-வும் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்த ஆம்புலன்ஸ், பயன்பாட்டிற்கு வந்து 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதால், பழுது ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.