‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது’ என தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு செல்லாது என அறிவிக்கும்படி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரணை செய்தார். மேலும் அவர், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (செப்டம்பர் 2) காலை வெளிவந்தது. அதன்படி, ‘எடப்பாடி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது’ என தனி நீதிபதி அளித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 11-ம் தேதி எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தீர்ப்பின் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். இந்த தீர்ப்பு எங்களின் பலவீனம் இல்லை, பலம்’ என்று தெரிவித்துள்ளார்.