அனைத்து சமுக மக்களும் கொண்டாடும் தீபாவளி இன்று மிக முக்கியமான பண்டிகையாக மாறிவிட்டது. தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து இங்கு பலருக்கும் ஒன்றும் தெரியாமலேயே இருக்கின்றது. தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என்று கொண்டாடுகிறவர்களிடமே கேட்டால் அவர்கள் தீபாவளி முருகன் சூரனை வதம் செய்த நாள் தானே என்பார்கள் .இந்த லட்சணத்தில் தான் பல இந்துக்கள் தீபாவளி கொண்டாடுகின்றார்கள். ஊரோடு சேர்ந்து கும்மியடிப்பது போலவே ஒட்டுமொத்தமாக ஊருக்கு கிளம்பி போவது, புத்தாடை, இனிப்பு, பட்டாசு, எதாவது ஒரு கோவிலுக்குக் கடமைக்காக ஒரு விசிட் அடித்துவிட்டு வருவது , பிறகு புதுப் படம், மீதி நேரங்களில் தொலைக்காட்சிகளில் பார்வையை செலுத்தி நேரத்தை கழிப்பது..,சிலர் குடி, ஆட்டு இறைச்சிக் கறி என பார்ட்டி கொண்டாடுவது என இதனைத் தாண்டி தீபாவளி குறித்து வேறு ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவோ ,தெரிந்து கொள்ளவோ நாம் ஆர்வம் காட்டுவதுமில்லை …அதற்கு நமக்கு நேரமோ ஆர்வமோ இல்லை எனலாம் .
அப்படிப்பட்ட தீபாவளி பண்டிகை குறித்து நீங்கள் அறியாத தகவல்களைத்தான் நாம் இங்கு காண இருக்கிறோம் .
நம் தமிழகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி மகிழ்ச்சியோடு கொண்டாடும் விழாக்களில் தீபாவளியும் ஒன்று. அது நம் பாரம்பரியத்தில் ஒன்றாகவே மாறிவிட்டது. ஆனால் தீபாவளி என்ற பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் கொண்ட புராணக்கதைகளுக்கும் நம் தமிழகத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமலே இருக்கிறது.
தமிழர்களுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லாத இந்த தீபாவளி’ எப்படி நம் தமிழகத்துக்குள் ஊடுருவியது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க !
இதையும் படிங்க:மேற்கிந்திய தீவுகள் அணியை வெளியனுப்பிய அயர்லாந்து….இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
வட இந்திய புராணக்கதைகளில் நரகாசூரன் என்ற அரக்கனை மகாவிஷ்ணு வதம் செய்யும்போது நரகாசூரன் தன் தாயான சத்தியபாமா-விடமும் விஷ்ணுவிடமும் தான் இறந்த இந்த நாளை மக்கள் அனைவரும் நல்ல நாளாக இனிப்புகளை கொடுத்து கொண்டாட வேண்டும், என்னுடைய இறப்பு மக்கள் மனதில் என்றும் நிற்கவேண்டும் என்று வரம் கேட்கிறான் அதை ஏற்ற சத்தியபாமா மற்றும் விஷ்ணு அவனுக்கு அந்த வரத்தை கொடுத்ததால் தான் ‘தீபாவளி ‘ என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று கூறப்படுகிறது.
அதே போல் வால்மீகி ராமாயணத்தில், ராமன் கொடியவனான ராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தை முடித்து கொண்டு தனது மனைவி சீதா மற்றும் லட்சுமணனை அழைத்து கொண்டு அயோத்திக்கு திரும்புகிறார். அது ஒரு அம்மாவாசை நாள் என்பதால் ராமன் மற்றும் சீதா இருவரும் சரியான பாதையில் அயோத்திக்கு திரும்ப வேண்டுமென்று அந்நாட்டு மக்கள் தங்கள் வீடுகள் முழுதும் தீபங்களை ஏற்றி வைத்தனர். அந்த தீப ஒளியில் அயோத்தியே தங்கம் போல ஜொலித்தது. அந்த வெளிச்சத்தை வைத்ததே ராமனும் சீதாவும் அயோத்தி திரும்பினார்கள். இந்த சம்பவத்தை கொண்டாடும் வகையிலே தீபாவளி கொண்டாடப்படுகிறது என மற்றொரு கதை கூறுகிறது.
இதே போல் இன்னொரு புராண கதையும் வட இந்தியாவில் சுற்றி வருகிறது. அது என்னவென்றால், ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாட்கள் கேதாரகெளரி விரதம் முடிந்த அந்த தினத்தில் தான் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாதீஸ்வரர்’ உருவமெடுத்தார். அப்போது இறைவன் முழு ஜோதி வடிவமாக காட்சியளித்ததால், அதை நினைவு கூறவே இந்த தீபாவளி விழா கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுவது உண்டு.
இப்படியாக பல புராணக்கதைகள் தீபாவளி விழாவை சுற்றி திரிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் தீபாவளி என்ற பண்டிகை எப்படி உருவானது என்றெ ஒரு தெளிவு இல்லாத நிலையில், அதை ‘தமிழர்களின் பண்பாட்டு விழா’ போல மாற காரணம் நம் ‘அறியாமையா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மறைமலை அடிகள் தீபாவளி குறித்துக் “தமிழர்மதம்” எனும் நூலில் “ஆரிய பிராமணர்கள் கட்டுவித்த கற்பனை கதையே ” தீபாவளி” என்கிறார்.
இன்னும் தீபாவளி குறித்து பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய பாடலில்
நரகனை கொன்ற நாள் நல் விழாவா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லவனா தீயனா? என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், தமிழர்களின் பண்பாட்டை குறிக்கும் உன்னத விழாக்கள் ‘தை பொங்கல், கார்த்திகை தீபம் போன்றவையே.
உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, அதை கொடுத்த சூரிய கடவுளுக்கு, அதற்காக உழைத்த ஏறுகளுக்கும் நன்றி தெரிவித்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
அதே போல், கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியில் , “கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர்” என்று கார்த்திகை தீபம் குறித்து பாடப்பட்டிருக்கிறது.
சங்க இலக்கிய நூலான அகநானூறில் தமிழரகள் ஐப்பசி மாதம் அமாவாசை நாளில் விளக்கு ஏற்றி செய்யும் வழிபாடு குறித்து கூறப்பட்டுள்ளது பின்னாட்களில் இதனை வடநாட்டு தீபாவளியோடு சேர்க்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் தமிழ் அறிஞர்கள்.
நீண்ட காலமாகப் பின்பற்றி வந்த ஐப்பசி மாத அமாவாசை விளக்கேற்றும் நாளையும், கார்த்திகை தீப திருநாளையும் ஒன்றாக சேர்த்து தீபாவளி என்று தமிழர்களிடம் திணிக்கப்பட்டிருக்கும் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். கி.பி 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு தமிழகத்தில் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்த காலகட்டத்தில் தான் ‘தீபாவளி’ தமிழர்கள் மத்தியில் ஊடுருவி இருக்கும் என வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது.
ஆனால், தற்போதோ கார்த்திகை தீபத்தை விட தமிழர்கள் தீபாவளியை எட்டுத்திக்கும் கொண்டாடி வருகின்றனர்.
பிற மதங்களை ஏற்பதை போல, பிற பண்டிகைகளையும் தமிழர்கள் ஏற்றுக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அந்த காலகட்டங்களில், இயற்கையை நேசிக்கும் தமிழர்கள் எந்த ஒரு காலத்திலும் பட்டாசு வெடித்து
இந்நாளை கொண்டாடியதில்லை. குழந்தைகள், முதியோர்கள், நோயுற்றவர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமல்லாது பறவைகள், விலங்குகள் என பல உயிர்களும் பட்டாசு வெடிச்சத்தத்தால், காற்று மாசுபாட்டால் பாதிப்புக்குள்ளாகின்றன.
இருளை நீக்க, தீபங்களை ஏற்றி பண்டிகைகளை கொண்டாடுவது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் ஆனால் அதிலுள்ள பொய்யான கட்டுக்கதைகளையும், பண்பாட்டு மாற்றத்தையும் புரிந்து கொள்ளாமல் பெருமளவில் பணத்தை செலவழிப்பது தான் முட்டாள் தனம்.
தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் என்பது மற்ற மக்களை விட தனித்துவம் மிக்கது. அதனை அறியாமையால் நாம் இழந்து வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை !