தில்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக உள்துறை அமைச்சகத்திற்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இன்று காலை தில்லி தெற்கு துவாரகா பகுதியில் 17 வயதுடைய பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு மர்ம நபர்கள் அந்தப் பள்ளி மாணவி மீது ஆசிட்டை வீசி கொடூர செயலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் பள்ளி மாணவியின் முகம், கண்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே அந்தப் பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீசியத்தைத் தொடர்ந்து, தில்லி மகளிர் ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
அதன்படி சில்லறை விற்பனையில் ஆசிட் விற்பதை தடை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தில்லி மகளிர் ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இதனிடையே, சிறுமி மீது ஆசிட் வீசியவர்களை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!