சீனாவிலிருந்து மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல நாடுகளில் கொரோனா மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று பரவி வருகிறது.
இதைத்தொடர்ந்து இந்தியாவில், அனைத்து விமான நிலையங்களிலும் சர்வதேச பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மூன்று நாள்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனாவிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து நேற்று காலை மதுரை வந்த விமானத்தில் மொத்தம் 72 பயணிகள் பயணித்தனர். அவர்களில் 15 பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வெளியான நிலையில், இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
விசாரணையில் சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்துக்கு வந்த விருதுநகரை சேர்ந்த 39 வயது பெண் மற்றும் அவரது 5 வயது பெண் குழந்தை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவருடன் பயணித்த 15 வயதுடைய மற்றொரு மகளுக்கு கொரோனா இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனாவால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய அவர்களின் சளி மாதிரிகள் மரபனு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடிகர்கள் மட்டும் இல்லைங்க…இவுங்களும்தான் மோதிக்குறாங்க..