ஹரியானாவில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராத தாயும் மகனும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவானது. அதன் பின், கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு தொற்றின் அளவு குறைந்து மக்கள் மத்தியில் சற்று அச்சம் விலகியது.
தற்போது நாடு இயல்பான நிலைக்கு திரும்பிகொண்டிருக்கும் இந்த நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில், கொரோனா அச்சத்தால் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வரமால் முடங்கி இருந்த தாயும் மகனும் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலம், சக்கர்பூரில் இருக்கும் ஒரு குடியிருப்பில் வசித்து வந்த ஒரு நபர், குருகிராம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மனைவியும் மகனும் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருப்பதாகவும், ஒன்று தன்னை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால், வீட்டில் இருக்கும் தனது மகனை வெளியே அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நபர் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் அந்தக் குடியிருப்புக்கு சென்று, அந்தப் பெண்ணையும் 11 வயது மகனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது விசாரணை நடத்தப்பட்டதில், வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனா வந்துவிடுமோ என்கிற அச்சத்தில், இருவரும் தங்களை வீட்டுக்குள் வைத்து பூட்டிக்கொண்டது தெரியவந்தது. மேலும் அப்பெண்ணின் மனநிலையை ஆராயவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தில்லி மேயர் தேர்தல்; மோதலில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்கள்!