இந்தோனேஷியா ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், பாமாயில் எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது. அதுவும் இரு மடங்கு விலை உயர்வு என்ற செய்தி நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இதே போன்று பிற சமையல் எண்ணெய் விலை உயரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வீடுகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி மிகப்பெரிய ஓட்டல்கள் வரை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சமையல் எண்ணெய்களில் முதன்மையானது பாமாயில்.
பாமாயில் பயன்படுத்தினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற கருத்து இருந்தாலும், ஏழைகளின் எண்ணெய்யாக விளங்குவதற்கு காரணம், அதன் விலை தான். தற்போது அதற்கும் பெரிய ஆப்பு நமக்கு காத்திருக்கிறது.
சர்வதேச அளவில் மிகப்பெரியளவில் பணவீக்க விகிதமானது உச்சம் தொட்டு வரும் நிலையில், அதன் தாக்கத்தினை பல நாடுகளும் உணரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் சன் பிளவர் எண்ணெய் விலையானது மிக மோசமான ஏற்றத்தினை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாமாயில் எண்ணெய்யின் இரட்டிப்பு விலை உயர்வுக்கு, ரஷ்யா- உக்ரைன் போர் தான் காரணம் என்கின்றனர் எண்ணெய் வியாபாரிகள். கடலை, தேங்காய், சூரியகாந்தி, நல்லெண்ணெய்க்கு மாற்றாக சாதாரண மற்றும் ஏழை மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் பாமாயில் தான்.
இந்தியாவில் என்னதான் பாமாயில் உற்பத்தி செய்யப்பட்டாலும், நம் மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை என்பதாலேயே கைகொடுக்கிறது இந்தோனேஷியா.
கொரோனா, உக்ரைன் – ரஷ்யா போரால் உலகமே திண்டாடி வரும் நிலையில், இந்தோனேஷியாவும் அதிலிருந்து தப்பவில்லை. உள்நாட்டிலேயே பாமாயில் விலை கிடுகிடுவென ஏறியதால், அதை தடுத்து நிறுத்த ஏற்றுமதிக்கு தடை போட்டுள்ளது இந்தோனேஷியா.
இந்த முடிவுதான் இந்தியாவிலும் பாமாயில் விலையை உச்சத்தில் கொண்டு வைத்திருக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் ஏற்கெனவே சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது பாமாயில் விலையும் தன் பங்குக்கு உயர்ந்து வருகிறது.
எண்ணெய் விலை :
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 140 ரூபாய் வரை இருந்த ஒரு லிட்டர் பாமாயில் விலை, இந்தோனேஷியாவின் அறிவிப்பால் இப்போதே 170 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது.
அடுத்த வாரத்தில் பாமாயில் விலை லிட்டர் 200 ரூபாயைத் தொடும் எனக் கூறப்படும் நிலையில், விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மக்கள்.
சோப்பு, ஷாம்பூ, பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கவும் பெரும்பாலும் பாமாயிலேயே பயன்படுத்தப்படுவதால், அவற்றின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், நம் நாட்டிலேயே அதிகம் கிடைக்கும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
தற்போது ரஷ்யா – உக்ரைன் போர் நீடிப்பதால், இந்தோனேஷியாவில் இருந்து பாமாயில் ஏற்றுமதி செய்ய ஏப்., 28 முதல் தடை விதிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து மட்டும் உலக நாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பாமாயில் மீதான தடைக்கு மத்தியில் இது நிச்சயம் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். மேலும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் சமையல் எண்ணெய் விலை உள்ளிட்டவற்றில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிற சமையல் எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், 190 முதல் 200 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 180 முதல் 190 ரூபாய்க்கும், தேங்காய் எண்ணெய் 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் மார்ஜின் விகிதத்தினை பாதிக்கலாம். மொத்தத்தில் இது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் அவற்றின் விலைகளை உணவு மற்றும் பொது விநியோகத் துறை கண்காணித்து வருகிறது, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உள்நாட்டு சமையல் எண்ணெய் வகைகளின் விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை மேலும் குறைப்பது குறித்து விவாதிக்க முக்கிய சமையல் எண்ணெய் பதப்படுத்தும் சங்கங்களுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசியலுக்கு வருவாரா பிரசாந்த் கிஷோர்? அடுத்த கட்ட திட்டம் தான் என்ன?