இன்று முதல் கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் ஆர்.தங்கவேலு தெரிவித்துள்ளதாவது:
கோயம்புத்தூர் மாநகராட்சியில் தனியார் மூலம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு நிர்ணயித்த தின ஊதியம் ரூ.721 ஆகும். ஆனால், ஒப்பந்ததாரர் வழங்குவதோ ரூ.333 ஆகும். இத்தனை குறைந்த சம்பளத்தில் அவர்கள் வாழ்வது எப்படி?
அதேபோல, கோவை மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்துக்கு பணிபுரிகின்றனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராடியபோது, மேயர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, சிறப்பு மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை .
இந்நிலையில், கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளுக்காக இன்று (அக்டோபர் 25) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்துக்கு மநீம முழு ஆதரவு தெரிவிப்பதுடன், அவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தும். இப்பிரச்னை தீவிரமடைவதற்கு முன், தமிழக முதல்வர் தலையிட்டு, உடனடியாக தீர்வுகாண வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரணகளத்தில் குதூகலம் ! 2 மகன்களுடன் தல தீபாவளி கொண்டாடிய நயன்தாரா – விக்கி