கோவையில் கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது சுட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஆவாரம்பாளையத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கும்பல் ஒன்று சத்திய பாண்டி என்ற நபரை அரிவாளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர். மேலும், இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இரு ரவுடி கும்பலுக்கு இடையே முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றது என தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் அரக்கோணம் மற்றும் சென்னை நீதிமன்றங்களில் சரண் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, அந்த நான்கு பேரில் சஞ்சய் ராஜா என்ற கூலிப்படை தலைவனை காவலில் எடுத்து கோவை தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சீன நாட்டு தயாரிப்பு என்பதும், இரு துப்பாக்கிகள் தன்னிடம் இருப்பதாகவும் சஞ்சய் ராஜா தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, சென்னையில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு துப்பாக்கியை கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக சஞ்சய் ராஜா விசாரணையில் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை சஞ்சய் ராஜாவை தனிப்படை காவல்துறையினர் அழைத்துக்கொண்டு கரட்டுமேடு பகுதிக்கு சென்றனர். அப்போது சஞ்சய் ராஜா தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது சுட்டார். இதில் காவல்துறையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு கருதி, உதவி ஆய்வாளர் சந்திரசேகர், சஞ்சய் ராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சஞ்சய் ராஜாவுக்கு இடது காலில் குண்டு பாய்ந்தது. மேலும் நிலை தடுமாறி கீழே விழுந்த சஞ்சய் ராஜாவின் துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையால் பாலியல் தொல்லைக்கு உள்ளான குஷ்பு; வெளிவந்த தகவல்..