தனது சிறு வயதில் தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக நடிகை குஷ்பு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு ஆவார். அதன்பின் அரசியலுக்குள் வந்த குஷ்பு காங்கிரசில் இருந்து பிரிந்து பிறகு, பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், குஷ்பு சமீபத்தில் தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குஷ்பு, சிறுவனோ, சிறுமியோ, குழந்தையோ பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால், அதன் தாக்கம் வாழ்க்கை முழுவதும் பயமுறுத்திக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்.
தனது மனைவியையும் குழந்தையையும் அடிக்கும் குடும்பத் தலைவராக தனது தந்தை இருந்ததாகவும், தனக்கு எட்டு வயது இருக்கும்போது தந்தை பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் குஷ்பு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது குழந்தை பருவம் மிக மோசமானதாக இருந்ததாகவும், அதனை எதிர்த்து போராடும் தைரியத்தையும் நம்பிக்கையையும் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
தந்தையின் பாலியல் தொந்தரவை தாங்க முடியாமல் தனது 15 வயதில் தந்தைக்கு எதிராக பேசத் தொடங்கியதாகவும் தெரிவித்த அவர், தனக்கு 16 வயது ஆவதற்குள் தங்களை விட்டு சென்றதாகவும் குஷ்பு கூறினார். மேலும் அப்போது அடுத்தவேளை உணவுக்குகூட என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்ததாகவும் குஷ்பு வேதனை தெரிவித்தார்.
‘மருந்து வாங்கக் கூட பணம் இல்லை’ – ரஜனியிடம் உதவி கேட்கும் தயாரிப்பாளரின் உருக்கமான வீடியோ!