சீனாவின் தேசிய சுகாதார மையம் இனி தினசரி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடராக, நீங்கா நினைவில் இடம் பிடித்து விட்டது கொரோனா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ், உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டி எடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் போன்ற அவசர கால நடவடிக்கைகள் அத்தியாவசிய நடவடிக்கைகள் ஆகிப்போகின.
முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடை பிடிப்பதும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்கள் ஆகிப்போனது. அதனைத் தொடர்ந்து ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என பலவிதமான ஊரடங்குகள் வந்து சென்றாகி விட்டது.
இந்தச் சூழலில்தான், சென்ற ஆண்டின் பிற்பகுதியில் இருந்து கொரோனா தொற்று குறைந்து வருவதாக, கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டன. கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவும் சமீபத்தில்தான் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இந்நிலையில், சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், சீனாவில் உயிரிழப்புகளும் நேர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதோடு, டிசம்பர் 4-ஆம் தேதியில் இருந்தே சீன அரசு கொரோனா சமந்தமான உயிரிழப்புகளை பதிவு செய்யவில்லை என்றும், கொரோனா சார்ந்த விஷயங்களை சீன அரசு மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து, தற்போது சீனா அறிவித்துள்ள அறிவுப்பு புதிய சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. அதன்படி, இதுவரை தினசரி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வந்த சீனாவின் தேசிய சுகாதார மையம் இனி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
அதேநேரம், கொரோனா பாதிப்பு விவரங்களை இனி சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் சர்ச்சைகள் எழுந்துள்ளது.
ஆசிய அளவிலான போட்டியில் வென்ற காஞ்சிபுர மாணவர்கள்; பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!