எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடராக, நீங்கா நினைவில் இடம் பிடித்து விட்டது கொரோனா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ், உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டி எடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் போன்ற அவசர கால நடவடிக்கைகள் அத்தியாவசிய நடவடிக்கைகள் ஆகிப்போகின.
முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடை பிடிப்பதும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்கள் ஆகிப்போனது. அதனைத் தொடர்ந்து ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என பலவிதமான ஊரடங்குகள் வந்து சென்றாகி விட்டது.
இந்தச் சூழலில்தான், சென்ற ஆண்டின் பிற்பகுதியில் இருந்து கொரோனா தொற்று குறைந்து வருவதாக, கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் தற்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று டெல்லியில் ‘கொரோனா’ கட்டுப்பாடு குறித்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அதேநேரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் பிறப்பித்துள்ளேன். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.’ என்று தெரிவித்துள்ளார்.
அட்லீ வீட்டு விஷேசத்தில் கலந்துக்கொண்ட நடிகர் விஜய்..