கேரள மாநிலத்தில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு மாணவ, மாணவிகளை துப்பாக்கி பாதுகாப்பில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வரும் ‘வீடியோ’ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் அண்மைக்காலங்களாக தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை இந்த நாய்க்கடியால் நிரைய சிரமங்களையும் ,உயிர் இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர். மக்களும் வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கேரளாவில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1 லட்சம் பேர் தெருநாய்களால் கடி பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாநில அரசின் தகவல் படி 2022ல் மட்டும் இதுவரை கேரளாவில் 21 பேர் தெருநாய்க்கடியால் இறந்துள்ளதாகவும், மேலும் பாதிக்கப்பட்ட ஐந்து பேர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.வி.கே.பிஜு என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கேரளா மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டதாகவும், அது பொதுமக்களை கடிப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெருநாய்கள் கடிப்பதை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்களை கண்டறிந்து அவற்றிற்கு தடுப்பூசி செலுத்தவும் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தெருநாய்களுக்குத் தொடர்ந்து உணவளித்தால் அவற்றுக்கு உணவு கொடுக்கும் மனிதர்களே, தடுப்பூசி போடுவதற்கும் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அந்த விலங்குகள் மக்களைத் தாக்கினால் அதற்கான செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளான சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருந்தது .
இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேக்கல் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் பள்ளி குழந்தைகளை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@TheKeralaPolice people can carry guns like that is that allowed?@CMOKerala please take proactive measures or else people will start hating #kerala for killing #dogs. https://t.co/7WDBYJvuYw
— Streetdogsofbombay #Feedastrayeveryday (@streetdogsof) September 17, 2022
இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு , ”குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கடமை தனக்கு உள்ளதாகவும், தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் பள்ளிக்கு செல்லவே குழந்தைகள் அச்சப்படுவதாகவும் தெரிவித்தவர் , மேலும் இதன் காரணமாக மட்டுமே ‘ஏர் கன்’ துப்பாக்கியை ஏந்தியபடி மாணவியரை அழைத்துச் செல்கிறேன். இந்த துப்பாக்கியால் சுட்டால் நாய்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது .அதனால் என் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த கடையின் உரிமையாளர் கைது!
இந்நிலையில் கேரளாவில் மக்களுக்கு நாய்கள் மீது பயம் மட்டுமின்றி வெறுப்புணர்வும் ஏற்பட ஆரம்பித்துள்ளதால் ,கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றை கொன்று குவிக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதுவரை கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் மட்டும் இரண்டு மாதங்களில் 40க்கும் மேற்பட்டோர் நாய்கடிக்கு ஆளாகி உள்ளனர். இதனால் இதே கோட்டயத்தில் ஒரே ஒரு குடியிருப்பு பகுதியில் மட்டும் 12 நாய்கள் இறந்து கிடந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் இந்த நாய்களுக்கு உள்ளூர்வாசிகளே விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது .
இந்த நிகழ்வுகளை பற்றி கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) பதிவு ஒன்றை வெளியிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் தற்போது கேரள மக்கள் நாய்களை கொலை செய்ய வழிவகைதேடி வருவதாகவும், கேரளாவில் நாய்கள் படுகொலை செய்யப்பட்ட படங்கள் மிகவும் பயமுறுத்துவதாக உள்ளதாகவும் கூறியிருப்பதோடு, இவ்வாறான கொலைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
This is so horrifying that mass killing of dogs in #kerala is taking place. I would request to reconsider such moves and put an end to these brutal killings.
— Shikhar Dhawan (@SDhawan25) September 16, 2022