உத்தர பிரதேசத்தில் குடிபோதையில் மருத்துவர் சிகிச்சை அளித்ததால், ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், சிராவ்லி காசிப்பூர் பகுதியில் பெண் குழந்தை பாப் கார்ன் சாப்பிட்டபோது, அது தொண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இரவு நேரம் என்பதால் மருத்துமனையில் அப்போது சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லை. சிறிது நேரம் கழித்து தகவல் அறிந்து மருத்துவர் வந்ததும் குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளார். அப்போது திடீரென குழந்தையின் உயிர் பிரிந்தது.
இதன்பிறகு, அந்த மருத்துவர் குழந்தையின் தாயாரிடம் வேறொரு குழந்தையை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் ஊர்மக்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதன் எதிரொலியாக தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் நீலம் குப்தா, மருத்துவர் குப்தாவை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். 3 மருத்துவர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து, தலைமை மருத்துவ அதிகாரி அவதேஷ் குமார் கூறுகையில் , ‘குழந்தையின் உறவினர்கள் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குழு அமைத்து ,சம்மந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்., இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையெனில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரபல நடிகரின் தாயார் காலமானார்…. ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல்!