முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி, பல்வேறு தீவிரவாத பயிற்சிகள் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது.
இந்தியா முழுவதும் சுமார் 15 மாநிலங்களில் 93 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. மொத்தத்தில் இந்த சோதனையில் இதுவரையில் 8 மாநிலங்களில் இருந்து 170 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.
இதையும் படிங்க: இலங்கை கொழும்பு அருகே பயங்கர தீ விபத்து; 80-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்
இதைத்தொடர்ந்து, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பாக கைதானவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். உத்தரபிரதேசத்தில் சரத்பூர், மீரட், சியானா பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியில் சகின்பாத் மற்றும் ஜமியா பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அதிரடி படை வீரர்களும் ஒருங்கிணைந்து சோதனை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஊபா சட்டத்தின் கீழ் ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் உஷார் நிலையில் இருக்கும்படியும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.