அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
உயர்கல்வித்துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் 11 பேருக்கு மட்டும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களைத் தேர்வு செய்திட ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை, கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும் இதன் முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.
அதன்படி, விரிவுரையாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ‘இன்புளூயன்சா காய்ச்சல்’ சுகாதாரத் துறை தகவல்.