சென்னை: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் ,காஞ்சிபுரம் , விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 28) நண்பகல் 12.15 மணிக்கு சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி,
ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் தமிழகத்தில் வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர்,காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அக்டோபர் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை:
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் 6 செ.மீ., மழையும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் மதுரை பேரையூரில் 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : லதா மங்கேஷ்கரின் பிறந்தநாள் கொண்டாட்டம்; 40 அடி உயரமுள்ள வீணை சிலை திறப்பு!